in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் 14 உயிர்களைப் பறித்த முந்தைய அதிமுக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
சமூக விரோதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட மண்ணின் மக்களுக்கான நீதியை நிலைநாட்டும்விதமாக, போராட்டக்களத்தில் நடந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கிற அம்மையார் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை மக்கள் மன்றத்திலும், ஆணையத்தின் முன் நேர்நின்றும் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வந்தேன். அவற்றைப் பிரதிபலிப்பது போல, சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை.
தூத்துக்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட அவப்பெயரையும், பழிச்சொல்லையும் முழுமையாகப் போக்கி, ஆளும் வர்க்கத்தின் கோரப்படுகொலைகளைத் தோலுரித்த அம்மையார் அருணாஜெகதீசன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமானப் பாராட்டுகளையும், பெரும் நன்றியையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தின் நூறாவது நாளில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாய் வந்தபோது, அவர்களை நோக்கித் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி, அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விடப்பட்டது. பேரணி நடைபெற்ற இடத்திற்குத் தொடர்பே இல்லாது தொலைதூரத்திலுள்ள பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அம்மையார் ஜான்சி படுகொலை செய்யப்பட்டார் என்பதும், போராட்டத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிலும் ஒருவர் பலியானார் என்கிற இரு சம்பவங்களே, இத்துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நிகழ்த்தியப் பச்சைப்படுகொலை என்பதற்கான சாட்சியங்களாகும்.
காவல்துறையினர் போராட்டக்காரர்களின் முட்டிக்குக் கீழே சுடுகிற வகையில் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிமுறையையே நாம் ஏற்காதபோது, போராட்டக்காரர்களின் தொண்டை, மார்புப்பகுதிகளைக் குறிவைத்து சுட்டு, தூத்துக்குடி மக்களைச் சுட்டுக் கொன்றொழித்தக் கொடுங்கோன்மையை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; மக்கள் தப்பியோடும்போதும் அவர்களைக் குறிவைத்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் எவ்வித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாக நின்றார்கள் என்பதும் அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை; மாறாக, மக்களைக் கொன்றுகுவிக்கும் நோக்கத்தோடே நிகழ்த்தப்பட்டது என்பதை அம்மையார் அருணா ஜெகதீசன் ஆதாரத்தோடு உறுதிசெய்திருக்கிறார். துப்பாக்கிச்சூடு குறித்தான முன் எச்சரிக்கை மக்களுக்குக் கொடுக்கப்படாததும், சுடப்பட்டவர்களில் ஒருவர்கூட முட்டிக்குக் கீழே சுடப்படவில்லை என்பதும் இது திட்டமிட்டப் படுகொலை என்பதை ஆணித்தரமாகக் கூற போதுமான காரணமாகும்.
போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை அறியப் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர் கட்டாயம் சீருடையில்தான் வர வேண்டும் எனும் விதியிருக்கும்போது, சீருடை அணியாத காவலர்கள் அதிநவீனத்துப்பாக்கியோடு எப்படிக் களத்திற்கு வந்தார்கள்? துப்பாக்கிச்சூடு நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே எப்படி அவர்களுக்குத் தெரிந்தது? கூட்டத்தைக் கலைக்க வழிவாய்ப்புகள் இருந்தும் அதனைச் செய்யாது, துப்பாக்கிச்சூட்டைக் கையிலெடுத்தது எதற்காக? எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலும், கூட்டத்திலிருந்து தப்பியோடியவர்களைக்கூட விடாமலும், காவலர்கள் வாகனத்தின் மீது ஏறி நின்று, போராட்டக்காரர்களைக் குறிவைத்துச் சுட்டுக்கொன்றது எதனால்?
போராட்டத்தில் சுடப்பட்டவர்கள், காயம்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் வளாகத்தில்கூட துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தேவையென்ன வந்தது? இவ்வளவு பெரிய போராட்டம் நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் நாளன்று, தூத்துக்குடியில் இல்லாது மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டிக்கு ஏன் சென்றார்? துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது வட்டாட்சியர்கள்தான் எனக்கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா? நாடே உற்றுநோக்கிக்கவனிக்கிற ஒரு போராட்டத்தில், மத்திய/மாநில அரசின் அனுமதியில்லாமல் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளிக்கிற அளவுக்கு வட்டாட்சியர்களுக்கு இந்த அமைப்பில் அதிகாரமும், வலிமையும் இருக்கிறதா? என நீளும் கேள்விகள் யாவும் வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாக மண்ணின் மக்களைக் கொன்றொழிக்க அன்றைய அரசுகள் நிகழ்த்திய சதிச்செயலை அம்பலப்படுத்துகிறது.
நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையில், காக்கை, குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; காவல் துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனக்கூறி, 17 காவல்துறையினர் பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி சுடலைக்கண்ணு மட்டும் 17 சுற்றுகள் சுட்டுள்ளார் எனவும், 4 இடங்களில் அவரைச் சுட வைத்ததன் மூலம், அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது எனவும், காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்விதான் தூத்துக்குடி படுகொலை எனவும் கூறியுள்ளது ஆணையத்தின் அறிக்கை. 14 உயிர்களைப் பலிகொண்ட படுகொலைகளுக்கு முழுமுதற் பொறுப்பேற்க வேண்டிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைத் தெரிந்துகொண்டேன்’ எனக்கூறிய பொருந்தா வாதம் முழுமையானப் பொய்யென்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை.
துப்பாக்கிச்சூடு குறித்தான ஒவ்வொரு செய்தியும் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதன் மூலம் அதிமுக அரசால் நிகழ்த்தப்பட்டப் படுகொலையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தெளிவாகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எதற்காகத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்? எதற்காகப் பச்சைப்படுகொலைகளை அரங்கேற்றினார்? யாருக்காக இதுவெல்லாம் நடந்தது? அனில் அகர்வாலை மனம் நிறைவடையச் செய்யவா? பிரதமர் மோடியை மனம்நிறைவடையச் செய்யவா? இது மன்னிக்கவே முடியாத கொடுந்துரோகம்! வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களையே அரச வலிமையைக் கொண்டு, படுகொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
ஆகவே, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானோர் குடும்பத்தினருக்கு
50 இலட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு 10 இலட்ச ரூபாயும் துயர்துடைப்புத்தொகை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து, அவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
598 - 9
"யமகா (YAMAHA) நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்குத் துணைபோகாமல், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்"
யமகா இருசக்கர வாகன உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நெடுநாட்களாகப் போராடிவரும் நிலையில், அதனைத் தரமறுக்கும் யமகா நிர்வாகத்தின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். தொழிலாளர்களின் ஊதிய உரிமையைப் பெற்றுத்தராமல் யமகா நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் தமிழ்நாடு அரசின் முதலாளித்துவப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
சென்னையில் அமைந்திருக்கும் பன்னாட்டு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமகா தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களால் ஊழியர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடர் போராட்டம் நடத்தி, தங்களது அயராத முயற்சியால் இந்திய யமஹா மோட்டார் தொழிற்சங்கத்தை (IYMTS) அமைத்தனர். யமகா நிறுவனமும் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நீண்டகால ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது ஒப்பந்த விதிகளை மீறும் வகையில் தொழிற்சங்கத்துடன் அடுத்த மூன்றாண்டுக் கால ஊதிய ஒப்பந்தத்தைப் பேச மறுத்துவருகிறது.
அதுமட்டுமின்றி, பெரும்பான்மை தொழிலாளர்களைக் கொண்ட IYMTS தொழிற்சங்கத்திற்குப் போட்டியாக, தொழிலாளர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் தமக்கு ஆதரவான புதிய தொழிற்சங்கத்தை உருவாக்கி அதனுடன் பேச்சுவார்த்தையையும் தொடங்கியுள்ளது யமகா நிறுவனம். இது முழுக்க முழுக்கத் தொழிலாளர் விரோதப்போக்காகும். மேலும், தொழிற்சங்கம் தொடர்பான வழக்குகள் தொழிலாளர் நலத்துறையிலும், நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில், தமக்கு ஆதரவான மிகக்குறைந்த ஊழியர்களைக்கொண்ட தொழிற்சங்கத்துடன் யமகா நிறுவனம் ஊதிய பேச்சுவார்த்தையை நடத்திவருவது சட்டத்திற்கும் புறம்பானதாகும்.
யமகா நிறுவனத்தின் இத்தகைய தொழிலாளர் உரிமை பறிப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையும் துணைபோவது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. புதிய தொழிற்சங்கம் அமைக்கத் தேவையான ஆவணங்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவு இருக்கிறதா என்பதை உறுதிபடுத்தமால் அவசர அவசரமாக நிறுவன ஆதரவு புதிய தொழிற்சங்கத்திற்கு தொழிலாளர் நலத்துறை அனுமதியளித்தது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்குவது தொழிலாளர் நலத்துறையா அல்லது முதலாளி நலத்துறையா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
ஆட்சி அதிகார பலத்தை பயன்படுத்தி தொழிலாளர் சகோதரர்களுக்கு அவர்களின் வாழ்வாதார உரிமையையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய திமுக அரசு, பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளித்துவக் கொடும் மனப்பான்மைக்கு ஆதரவாகத் துணைபோவது சொந்த மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.
இத்தகைய அநீதிகளுக்கு எதிராக யமகா தொழிலாளர்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கும் உள்ளிருப்புப் அறவழிப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு, கோரிக்கைகள் வெல்லும்வரை தோள்கொடுத்து துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.
ஆகவே, தொழிலாளர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற IYMTS தொழிற்சங்கத்தை யமகா நிறுவனம் புறக்கணிப்பதைக் கைவிடச் செய்து, அவர்களின் வாழ்வாதார உரிமையான ஊதிய உயர்வினைப் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி
106 - 0
🟢பாலுக்கு அழாத குழந்தை
🟢கல்விக்கு ஏங்காத மாணவன்
🟢வேலைக்கு அலையாத இளைஞன்
Contact us: simplyseemanismofficial@gmail.com